Showing posts with label உரிமை. Show all posts
Showing posts with label உரிமை. Show all posts

Tuesday, March 06, 2007

தலைக் கவசம் ..ஒரு தெரியாத சங்கதி

தமிழக அரச்சின் சமீபத்திய உத்தரவு ஒன்று அநேகருக்கும் தெரிந்திருக்கும்.
வரும் ஜூன் 1 ந்தேதி முதல் தலைக் கவசம் [ஹெல்மெட்] கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் அவசியம் லைசென்ஸுடன் இனி கவசத்தையும் சுமக்க வேண்டும்.
கடந்த வருடத்தில் மட்டும் சாலை விபத்துக்கள் சுமார் 4500 உயிர்களை பலி கொண்டிருப்பதாக அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து 'டெக்கான்'என்கிற நுகர்வோர் அமைப்பு நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது.ஆணையை எதிர்த்து அல்ல.மத்திய அரசின் ஒரு ஆணையை அமலாக்கி ,அதன் மூலம் பல நுகர்வோர் பயன் பெறவே கோர்ட்டுக்குப் போயிருக்கின்றனர்.
இப்பவெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் பொருட்களின் மீதான வரி ஏய்ப்பை நுகர்வோர் அறியும் படி ஒரு சில விளம்பரங்களைக் காணலாம்.'ஜஹாஓ கிருஹக் ஜஹாஓ' என்ற இந்தி
வார்த்தையின் தமிழாக்கமாக,'விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள் 'என்று வரும்.
உப்புக்கும் மளிகைப் பொருட்களுக்கும் விழித்திருக்கச் சொல்லும் மத்திய,மாநில அரசுகள் முக்கியமான ஒரு அரசாணை விஷயத்தில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்பது
'டெக்கான்'அமைப்பு கோர்ட்டுக்குப் போகும் முன்னால் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது தெரியாது. 2005 செப்டம்பர் மாதம்மத்திய மோட்டார் வாகன சட்டம் 138-f ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அதில் ஒரு வாடிக்கையாளர் இரு சக்கரவாகனம் வாங்கும் போது அத்துடன் ஹெல்மெட்டையும் உற்பத்தி செய்த நிறுவனம் தர வேண்டும் என்பதுதான் அது.அதுவும் இந்திய அரசின் தரக் காட்டுப் பாட்டு விதிப்படியான தரத்துடன் இருத்தல் வேண்டும்.
வாகனத்துடன் சீட்,டயர் போன்றவைத் தரப் படுவது போலவஇலவசமாகவேத் தரப்பட வேண்டும்.உற்பத்திச் செலவுடன் விலையைக் கூட்டக் கூடாது.இது ஏப்ரல் 2006 லிருந்து நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் இன்றைய தேதிவரை எந்த நிறுவனமும் அதைக் கடைபிடிக்கவில்லை.நுகர்வோர் அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது கட்டாயமாக தலைக் கவசம் வேண்டுமென்பதால் இது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட இருக்கிறது.
2004 லிலேயே சட்டம் போடப்பட்டதால் அன்றிலிருந்து இன்றுவரை விற்பனையான அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் [சுமார் 19 லட்சம்]ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும்.இனி தயாரித்து வரும் வாகனங்கள் ஹெல்மெட்டுடனே வர வேண்டும் என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
மேலும் இனி வாகனங்களுடன் அளிக்கப்படக் கூடிய இலவச உதிரி பாகங்களின் விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
டீலர்களிடம் கேட்டால் இனி நுகர்வோர் வற்புறுத்தினால் நாங்கள் கம்பெனியிடம் சொல்வோம் என்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை இது குறித்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.தங்களுக்கு ஆதாயமான விஷயங்களுக்குத் தொண்டர்களை உசுப்பி விடும் சுயநல அரசியல்வாதிகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்குத் தேவையான ஒரு பொருளின் அவசியத்தை உணராமல் மெத்தனமாக இருக்கின்றனர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்,'இது கடந்த ஆட்சியின் குறைபாடு.இப்போதுதான் கவனத்திற்கு வந்திருக்கிறது ஆவன செய்வோம் 'என்கிறார்.
மக்கள் உயிர் பிரச்சனை எனும் போது கூட ஆளுங்கட்சி,எதிர்கட்சி என ஏலம்போடும் சமூக அமைப்பில் இருக்கும் நாம் எப்போது விழிப்பது?
இது போன்ற நுகர்வோர் அமைப்புகள்தான் நம் உரிமையைப் போராடி பெற்றுத்தர வேண்டும்.