Saturday, December 16, 2006

ரசிகர் மன்றங்கள் தேவையா???

வெகு நாட்களாகவே எனக்குள் உள்ள ஒரு கேள்வி ரசிகர் மன்றங்கள் தேவையா என்பது.
ஒரு பாரதிக்கோ,பாரதி தாசனுக்கோ,வள்ளுவருக்கோ ரசிகர் மன்றங்கள் இருந்திருந்தால்,இந்த கேள்வி எழும்பி இருக்காது.
இன்று நாட்டில் ரசிகர் மன்றம் யாருக்கு நடிகர்களுக்குத்தானே?
ஒரு நடிகர் என்பவர் யார்?ஒரு தொழிலாளி!
ஒரு இராணுவ வீரர்,ஒரு வக்கீல்,ஒரு டாக்டர்,ஒரு ஆசிரியர்,ஒரு அலுவலக ஊழியர் போல் அவரும் ஒரு தொழில் செய்பவர்.
தன் நடிப்பால்,தனித்தன்மையால் மக்களை வசீகரிப்பவர்.
அவர்கள் நடிப்பை இரசிக்கலாம்,ஆராதிக்கலாம் தப்பில்லை.
ஆனால்,அவர்கள் துதி பாட மன்றங்கள் ஏன்?
எல்லையில் போர் புரிந்து சாகசம் புரிந்த அல்லது புரிந்து கொண்டு இருக்கும் ஒரு இரணுவ வீரருக்கு ரசிகர் மன்றம் உண்டா?
மருத்துவத் துறையில் சாதித்து பல உயிர்களைக் காத்து தெய்வம் போல் இருக்கும் மருத்துவருக்கு உண்டா?
வருங்கால சமுதாயம் எனப்படும் மாணவகளை உருவாக்கும் சிறந்த ஆசிரியர் பலர் உண்டு.அவர்களில் யாருக்கேனும் மன்றம் உண்டா?
தமிழ்,இலக்கியம்,அறிவியல்,பொருளாதாரம் என பல்துறை சாதனையாளருக்கு ரசிகர் உண்டா?மன்றம் உண்டா?
70 ,80 களில் நடிப்பால் சாதித்து இமயமாய் இருந்தவர் பலர்.
மேற் சொன்ன துறைகளில் உழைத்து ஒருவர் தன் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாததை,
கோடி,கோடியாய் ஒரே படத்துக்கு ஊதியமாய் பெறும் நடிகர்கள்
என்ன சாதிக்கிறார்கள்?
நல்ல் நடிகரைப் பிடிக்கும்,நல்ல நடிப்பை உற்சாகப் படுத்துவோம்
தவறில்லை ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டாமே
"உலகின் எட்டாவது அதிசயமே"
21 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகமே"
ஆணை இடு தலைவா செய்து முடிக்கிறோம்"
உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு"
இது போன்ற புதுமை தலைப்புகளை போட்டியிட்டு,போஸ்டர் அடித்து தன் அபிமான நடிகரின் பிற்ந்த நாள் கொண்டாடும் ரசிகன் தன் குடும்பத்தாரின் பிறந்த நாள் அறிந்திருப்பானா சந்தேகமே
பொண்டாட்டி,பிள்ளையின் நகையை அடமானம் வைத்து,சர்க்கரைப் பொங்கல் வைப்பான் ,அந்த நடிகரோ வெளி நாட்டில் தன் குடும்பத்தோடு பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்.
நான் நடிகர்களை குற்றம் சொல்லவே மாட்டேன்.கண்மூடித்தனமாய் தனிமனித ஆராதனை செய்யும் நம் மடத்தனத்தை சாடுவேன்.
நடிகையா கோயில் கட்டச் சொன்னார்?நாமல்லவோ செய்தோம்.
செய்யும் தொழிலை மதிப்போம்,அவர்தம் நற்பண்புகளை போற்றுவோம் ,தனி மனித ஆராதனையை நிறுத்துவோம்.இன்றைய கால் கட்டத்தில்
ரசிகர் மன்றங்கள் எல்லாம் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகின்றன.
ஓட்டுப் போடுவது தனிமனித உரிமை.இன்னாரை ஆதரிக்கிறேன் என்று சொல்வது மறைமுகமாகமாக இன்னாருக்கு போடச் செய்யும் தூண்டுதல் அல்லவா?
ரத்த தானம்,கண் தானம் செய்யும் மன்றங்களும் உண்டு என்பதை மறுப்பது முறையாகாது.
இருப்பினும் பொதுச் சேவையை தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யலாம் அதற்கு மன்றங்கள் தேவை இல்லை.
அனைவரும் சமமே.
உழைப்பும்,ஊதியமும் மாறலாம்.ஆனால் சுய தன்மையை விட்டுக் கொடுத்து தனி மனித துதி தேவையா?சிந்திப்போம்.

6 comments:

  1. நண்பரே...ரசிகர் மன்றங்கள் என்னும் சாக்கடைகள் மக்களை அடிமைப்படுத்துபவை..அவை தேவையில்லை என்ற மன ஓட்டத்திற்கு நீங்கள் வந்தது நல்ல விஷயம்.ஆனால் அதற்கான காரணமாக நீங்கள் விவரிக்கும் சில விஷயங்கள் அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டியவை.

    //ஒரு நடிகர் என்பவர் யார்?ஒரு தொழிலாளி!//

    நடிகன் என்பவன் தொழிலாளி அல்ல.லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் கொள்ளைக்காரன்.

    //ஒரு இராணுவ வீரர்,ஒரு வக்கீல்,ஒரு டாக்டர்,ஒரு ஆசிரியர்,ஒரு அலுவலக ஊழியர் போல் அவரும் ஒரு தொழில் செய்பவர்.//

    இன்னும் அறியாப்பிள்ளையாகவே இருக்கிறீர்கள்.நாள் முழுக்க வேலை செய்தாலும் ஒரு ஆசிரியரும்,அலுவலக ஊழியரும் மாசக்கடைசியில் எத்தனை ஆயிரம் சம்பாதிக்க முடியும் என்பதையும் நடிகர்கள் சம்பாதிக்கும் தொகையையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    //அவர்கள் நடிப்பை இரசிக்கலாம்,ஆராதிக்கலாம் தப்பில்லை//

    ரசிப்பது கூட சரி..அதென்ன ஆராதிப்பது.கொஞ்சம் தெளிவாக சிந்தியுங்கள் நண்பரே..

    ReplyDelete
  2. சிந்திக்கறதா, என்ன விளையாடறீங்களா,
    அதுவும் நாட்ட பத்தி.

    மக்கள் சிந்திப்பதெல்லாம் அவர்கள் வீட்டு வாசல் வரை மட்டுமே. . . .

    ReplyDelete
  3. நடிப்பு என்பது தொழிலாகும் போது,நடிகன் என்பவனும் ஒரு தொழிலாளி தானே?[நடிகன் மட்டுமா சுரண்டடுகிறான். அவனை விட அதிகமாக நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்சுரண்டவில்லை?]

    நடிகர்களின் கோடி கோடி சம்பளம் நம்மால் ஆயுளுக்கும் சம்பாதிக்க முடியாது என்று சொல்லி இருப்பதை கவனிக்க மறந்தீர்களா?

    ஈடுபாடு என்பதைத்தான் 'ஆராதனை'' என்று விட்டேன்.சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. சிந்திக்க தவறியதால்தான் நம்மை பகடைக்காய்களாய் அரசியல் சதுரங்கத்தில் உருட்டுகிறர்கள்

    ReplyDelete
  5. மன்னிக்க வேண்டும் ஆழியூரான் சார்
    என் கருத்து சரியானதே.
    ஆராதனை என்றால் வழிபதடுதல் ,துதிபாடுதல்
    ஒரு நடிகைக்கு கோயில் கட்டுவது ஆராதிக்கவே அல்லாமல் வேறெதற்கு?

    "20 நூற்றாண்டின் ஆன்மீகமே " என்று ஒரு நடிகரை போற்றுவது ஆராதனை[வழிபாடு தானே?]
    நான் ரசியுங்கள் என்கிறேன் ஆராதிக்க சொல்லவில்லை

    ReplyDelete
  6. கெளசி,

    நல்லதொரு கட்டுரை. எத்தனை முறை நாம் எடுத்துயம்பினாலும், இந்த மக்களின் மண்டையில் கொஞ்சம் கடினம்தான் இறங்கச் செய்வதற்கு...

    இதோ போன வருடம் நான் போட்ட பதிவொன்று இதே லைனில்...
    ஆன்மீகம் சினிமா சந்தையில்...!

    சுட்டி வேலை செய்ய வில்லையென்றால் இதோ இதனை வெட்டி சுடுக்கிப் பாருங்கள்...

    http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_15.html

    ReplyDelete