Saturday, August 16, 2008

நட்சத்திர நன்றி......[.கல்லுடன்]

சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.
இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.

அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.

கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.
மேலும் அந்தக் காலத்தில் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.அரிசியில் கல் இருந்து சரியாகக் களைந்து போடாவிட்டால் கல் உண்டாகும்.அதிலும் ஆண்களுக்குத்தான் வரும் என்று.

பின்னர்தான் தெரிந்தது கல் என்பது நம் உடம்பில் சேரும் சுண்ணாம்புச் சத்து 'கால்சியம் ஆக்ஸலேட் என்ற படிமமாகப் படிந்து அளவில் பெரிதாகிக் கொண்டே வந்து சிறிநீர்த்தாரையில் அடைப்பை ஏற்படுத்தும் போது மிகுந்த வலியைத் தரும் என்பது.

இந்தவலியானது விலாப்பகுதி அல்லது இடுப்பின் பின்புறம் துவங்கி அதிகரிக்கும்.சிலருக்கு வாந்தி ஏற்படும்.வலியின் தீவிரம் அதிகரித்தால் அடிக்கடி காய்ச்சல்கூட வரும்.சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையும் கடுமையான வலியும் உண்டாகும்.

சிறு நீரில் உள்ள யூரிக் அமிலம் கால்சியம் உப்பாக மாறி படிமமாக படிகிறது.
ஆக்ஸாலிக் அமிலம் அல்லது பொதுவாக அமிலத்தன்மை கொண்ட உணவுகள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் இந்த கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
சிறுநீரகம் மட்டுமல்லாது,பித்தபை கல்,கால்பிளாடர் எனப்படும் கணையக்கல் என பல விதம் உண்டு.
ஆரம்ப காலத்தில் வலி தெரியாது. நம் உணவில் சேரும் கால்சியத்தின் அளவு மிகும் போது உடலில் உள்ள அமிலத்தன்மையால் உப்பாகி,உப்பு படிந்து கெட்டியாகி சிறு சிறு கற்களாக மாறி நகர முடியாமல் ஓரிடத்தில் அந்த தசைகளை உராயும் போதுதான் வலி தெரியும்.
மிகச் சிறிய அளவானது என்றால் மருந்துகள் மூலம் கரைக்கப்படும்.

அதிகமாக நீர் எடுத்துக் கொள்ளாததும் இப்படி ஓரிடத்தில் உப்பு படியக் காரணம்.
எப்படி அதிகம் தண்ணீரை ஊற்றி குழாய்களில் அடைப்பு இல்லாமல் கழுவுகிறோமோ அப்படி நாம் உட்கொள்ளும் நீர் உப்பைப் படியாமல் வெளியேற்றிவிடும்.
கல்லின் அளவு பெரிதாக இருப்பின் அறுவைச் சிகைச்சை ஒன்றே வழியாகும்.

முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யா,மாதுளம் பழம் நண்டு,பால் இப்படி கால்சியம் செறிந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர்,இளநீர்,குளுக்கோஸ் முதலிய பானங்களோடு,வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம்,கொள்ளுப் பயிறின் சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

அதிகம் எழுத நேரமில்லாது போனாலும் நித்தம் ஒன்றேனும் எழுத வேண்டும் என முடிந்தவரை முயற்சித்து எழுதி விட்டேன்.
நட்சத்திர வாய்ப்பு வழங்கிய தமிழ்மணத்திற்கும்
பதிவுகளைப் படித்த நண்பர்களுக்கும் நன்றி

வலியும்,வலிநிவாரணிகளும்

வலியும் வலி நிவாரணியும் என்று சொன்னதும் வழக்கம் போல ஏதோ மருத்துவக் கட்டுரை என நினைப்பீங்க.
உடல் வலிக்கு எந்த மருந்துக் கடையிலும் மாத்திரை கிடைக்கும்.
ஆனால் மனவலிக்கு ஏது மாத்திரை.
மனவலி எப்போது ஏற்படுகிறது.நாம் ஆசைப்பட்டபடி ஏதும் நடக்கவில்லையென்றாலோ அல்லது வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலோ மனதில் ஏற்படுகின்ற பாரம் அயர்ச்சியே மனவலியாகும்.
எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வாழவே பிடிக்கவில்லை என்ற எண்ணமும் அல்லது தற்கொலைக்கான முயற்சியும் கூட ஆளாளுக்கு மாறுபடும்.
மன வலியின் வேதனை அதிகமா கொஞ்சமா என்பது அந்த வேதனையின் தன்மையில் மட்டுமல்ல நாம் அதை எப்படி அணுகுகிறோம் என்பதிலும் அடங்கியுள்ளது.
கையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில் கரைத்துப் பருகினால் உப்பின் சுவை கரிக்கும்.ஆனால் அதே உப்பை ஒரு ஏரியில் கரைத்துப் பருகினால் உப்பின் தன்மையே தெரியாது.
உப்பின் அளவு ஒன்றாயினும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் அதன் சுவை மாறுபடுவது போல தோல்வி அல்லது வேதனையின் தாக்கமும் நாம் எப்படி அதை அணுகி சூழ்நிலைகளைச் சமாளிக்கிறோம் என்பதில் மாறுபடுகிறது.
ஒவ்வொருவருமே ஆசைப்பட்டது கிடைக்கனும் என்று நினைப்போம்.ஏதோ அதிசய அலாவுதீன் மாய விளக்கு கொடுப்பது போல வாழ்க்கையில் கேட்டதெல்லாம் கிடைக்கனும்.அது கடவுளின் கருணை என்றும் ,கிடைக்காத போது கடவுளுக்கு கருணையே இல்லையென்றும் புலம்புவோம்.
கேட்டதெல்லாம் தானாகவே கிடைக்க வாழ்க்கையென்ன மாய விளக்கா இல்லை அலாவுதீன் பூதமா?
ஆசைப் படுதல் தப்பில்லை. ஆனால் அதை அடைய நாமென்ன முயற்சி செய்திருக்கிறோம் என்பதே கேள்வி.
இந்த வாழ்க்கை நம்முடையது.இதில் ஏற்படும் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை உணர்ந்தால் வலிகளை மாற்றி சாதனைகளாக்க முடியும்.
முதலில் வலிகளுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மனிதர்களா?
சூழ்நிலைகளால் ஏற்படும் மாறுதல்களா?
நிகழ்வுகளா எனப் பார்த்தால்
முதலில் மனிதர்களால் ஏற்படும் வலிகள்
யாரும் நமக்கு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வலி ஏற்படுத்துவதில்லை .சிலநேரம் அப்படி நேர்ந்தாலும் ,பல நேரங்களில் இவர்கள் நமக்கு வேண்டியவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள் என்ற மன்னிக்கும் பாங்கு இருந்தால் வலியின் அளவு குறைந்துவிடும்.
நிகழ்வுகள் என்பது நம் பிரயத்தனத்திற்கு அப்பாற்பட்டவை.நம் கை மீறிய செயல்களோ ,இழப்புகளோ நம்மால் ஏற்படுவதில்லை.அதிலிருந்து மீண்டு வர வேண்டுமே தவிர வருத்தப் பட்டுக் கொண்டிருந்தால் வலி மிகவேச் செய்யும்
சூழ்நிலைகளையும் குறை சொல்லாமல் அந்த எங்கு தப்பு நடந்தது அதை எப்படிச் சரி செய்தால் நல்லது என்று உணர முற்படனும்.
வலிக்கிறதே எனப் புலம்பால் அதிலிருந்து விட்டு ஒதுங்கி நின்று அதன் காரணகாரியங்களை நோக்கும் போது வலியின் தன்மை குறைவதோடு நம்மிலிருந்து வேறுபட்டு புதிய கோணத்தில் பார்க்க முடியும்.
பொதுவாக மனித மனம் உணர்ச்சிகளால் ஆனாதாகையால் எல்லா வலிகளுக்குமே அவையே காரணமாகின்றன.
நம்மை ஆட்டிப் படைக்கும் உணர்ச்சிகளின் கலவையை நேர்மறையாகவும் அல்லது எதிர்மறையாகவும் வகைப் படுத்தலாம்.
ஏலை வாய்ப்பு,உடல்நலம்,வெற்றிகள்,இலாபம் இவை நேர்மறையான உணர்ச்சிகளாக சந்தோஷத்திற்கு அடிகோலும் என்றால்,
தோல்விகள்,வேதனைகள்.இழப்புகள்,அவமானம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகளாக மனதின் வலியை அதிகரிக்கச் செய்யும்.
நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

ஒரு தோல்வியை நிகழ்வை எப்படி எதிர் கொள்கிறோம் எப்படி சீர்தூக்கிப் பர்க்கிறோம் என்பதில்தான் மன வலிக்கான மருந்து இருக்கிறது.
ஒவ்வொரு செயலிலும் உள்ள திட்டமிடுதல்,அதைப்பற்றிய முழுமையான அறிவு,முழு ஈடுபாடு,நேர ஒழுங்கு இவைகளை வளர்த்துக் கொண்டு
மனதில் உள்ள தாழ்வு மனப் பான்மை,இதைச் செய்ய முடியுமா என்ற பயம்,தகுதிக்கு மீறிய முயற்சி இவைகளைக் களைந்து ஒரு வேலையில் மனம்,சிந்தனை ,ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைத்து முழுமையாக ஈடுபடும்போது வெற்றி நிச்சயம்.

தோல்வியே வந்தாலும் சூழ்நிலைகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அடுத்த முறை புது உத்வேகத்துடன் தன்னம்பிக்கையுடம் செயல்படும் போது பழைய வலிகள் மறைந்து மனநலம் பெருகும்.

Friday, August 15, 2008

ஆஸ்டியோ போரிஸிஸ்

'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.
ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?
புல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.
ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.

அந்த அளவுக்கு எலும்பு வலுவிழந்து எளிதில் உடையும் அல்லது நொறுங்கும் தன்மையைத்தான் 'ஆஸ்டோபோரிஸிஸ்,என்கிறோம்.

இது 40-50 ஐத் தாண்டியவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 100 க்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு கொஞ்சம் குறைவான சதவீதமும் ஏற்படக் கூடிய வியாதி.



இது ஒரு மௌன சாத்தான்.கையைக் காலை உடைத்துக் கொள்ளும் வரை வெளியே தெரியாது.
BMD எனப்படும் போன் மினரல் டெஸ்ட் மூலமே அறிய முடியும்.
போன் மினரல் என்பது வேறு ஒன்றுமில்லை முக்கியமாக கால்சியம்தான்.
உடம்பில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும் போது இந்த எலும்பு தேய்மானம் அல்லது வலுவிழத்தலும் எற்படுகிறது.
இதற்கு உணவுப் பழக்க வழக்கத்தோடு கால்சியம் சத்து செறிந்த உணவுகள் அவசியம்.அத்தோடு வைட்டமிம் D யும் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் இந்த ஆஸ்டியோபோரிஸிஸ் தாக்கக் காரணம் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் நின்று போதலும் ,ஹார்மோன் மாறுபாடுகளுமேயாகும்.

கருப்பையில் கோளாறு கருப்பை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கும் ஹார்மோன் குறை பாட்டால் உடலில் கால்சியம் சத்து குறைந்து எலும்பு வலுவிழக்கிறது.
ஆண்களைப் பொறுத்தவரை புகை பிடித்தல்,முக்கியமாக மது அருந்துதல் காரணமாகிறது.
சிலருக்கு பரம்பரையாகவோ அல்லது பிறவிக் கோளாறாகவோக் கூட இருக்கலாம்.

கால்சியம் அதிகம் நிறைந்த பால்,பால் பொருட்கள்,பச்சைக்காய்கறிகள்,கீரைஆகியவை உணவில் அவசியம் தேவை. குறிப்பாக முருங்கைக்கீரை,முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யாப் பழம்,அசைவ வகையில் நண்டு,இறால் இவைகளில் மிகுந்து காணப்படுகிறது.

வைட்டமின் D யும் கால்சியத்துடன் தேவை.அது இலவசமாகவே நமக்கு சூரிய ஒளியில் கிடைக்கிறது.காலையில் ஒரு சில நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி வெய்யிலில் நின்றாலே நம் தோலானது வைட்டமின் D ஐக் கிரகித்துக் கொள்ளும்.
இத்துடன் இந்த வியாதிக்கான சரியான மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தல் நலம்.
இந்த நட்சத்திர வாரத்தில் ஏதோ பெரிய மருத்துவர் ரேஞ்சுக்கு பதிவு போட்டிருக்காங்களே ன்னு நினைக்க வேண்டாம்.
அனுபவங்களும் கேள்விப் பட்டவைகளையும் பகிர்ந்து கொள்ளும் போது,மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணமே காரணம்.

Thursday, August 14, 2008

தொகுப்பாளர்களும் ,ஜாக்கிகளும்

ஒரு தொலைக்காட்சி அல்லது நேரடி நிகழ்ச்சியை கோர்வையாகவும்,சிலசமயம் கவிதை நயமாகவும் தொகுத்து வழங்குவது ஒரு தொகுப்பாளரின் வேலை.
ஆங்கிலமோ அல்லது தமிழோ அதில் நல்ல தேர்ச்சியும்,குரல்வளமும் தொகுப்பாளர்களின் முக்கிய தகுதியாகக் கருதப் படுகிறது.
ஆனால் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை பெண் தொகுப்பாளினிகளுக்கே 'மவுசு' அதிகம்.
அரைகுறையான கவர்ச்சி ஆடையில் வருவது இப்போது அடிப்படைத் தகுதியாகி விட்டது.
ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் இரண்டும் கலந்த தமிங்கலத்தில் பேசுவது,கெக்கே பிக்கே னு வார்த்தைகளுக்கு நடுவில் சிரிப்பது,அடிக்கடி விரித்துப் போடப்பட்ட தலைமுடியையோ அல்லது முன் நெற்றியில் விழும் முடியையோ தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பது,பேசத் தெரியாத மழலை போல கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது எல்லாமும் தொகுப்பாளினிகளின் அத்தியாவசிய தேவையாகும்.
தொலை பேசி வழி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் அட்டகாசம் தாங்காது.வழக்கமான நெட்வொர்க் குளறுபடியும் சேர்ந்து கொள்ள அந்த முனையில் இருப்பவர் ஒன்று கேட்க இவர் ஏதாவது தன் பாட்டுக்கு சொல்ல பார்க்கும் நமக்குத் தான் பற்றிக் கொண்டுவரும்.
சில நேரம் நிகழ்ச்சிக்கு சம்மந்தமே இல்லாமல் இவங்களாகவே எதையாவது பேசி வழிந்து விட்டு,பேசவந்தவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் 'சரிங்க அடுத்த காலர் கூப்பிடுகிறார் நன்றிங்க' னு முதலாமவரை 'கட்' செய்து விடுவர்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு எஃப்.எம் ரேடியோவின் விருப்பப் பாடல் நிகழ்ச்சி.
ஜாக்கி கேட்கிறார்.
'ஹலோ உங்க பேரு என்ன?'
''............'
'நீங்க என்ன செய்யறீங்க?'
'சும்மாதான் மேடம் இருக்கேன்'
இவர் ஜாக்கியிடம் கேட்கிறார்'நீங்க என்ன மேடம் பண்றீங்க'
'நானும் சும்மாதான் இருக்கேன்'
போனில் பேசுசியவர் சொல்கிறார்,'அப்படினா நாம ரெண்டு பேரும் சேர்ந்து.....[என்ன சொல்ல நினைத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்].'
அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் 'வாட்ட்ட்ட்ட்ட்?' அப்படினு பெண் குரல் கொடுக்க
'ஒன்னுமில்லை மேடம் எனக்கு....அந்த பாட்டு போடுங்க'என்று ஜகா வாங்கி விட்டார்.
இன்னொருமுறை
'உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா'
'இல்லைங்க'
'எத்தனை குழந்தங்க'
'என்ன'
'ஓ சாரி திருமணம் ஆகலைன்னு சொன்னீங்க இல்லை சரியாக் கேட்கலை'
இப்படி பூசி மழுப்பும் வழிசல்கள் வேறு.
தொகுத்து வழங்குவது என்பது ஒரு கலை.
பார்க்கக்கூடிய அழகும்,குரல்வளமும் இருப்பதோடு கண்ணியமான தோற்றமும் கட்டுப்பாடான அதே நேரம் நேயர்களைக் கட்டிப் போடும் சுவாரஸ்யமும் எல்லாமும் இருந்தால்தான் ஒரு நல்ல ஜாக்கியாகவோ அல்லது தொகுப்பாளராகவோ இருக்க முடியும்.
பெப்ஸி உமாவின் பல ஆண்டுகால வெற்றிக்கு இதுவே காரணம்.
ஓரளவு அழகோடு ,நல்ல குரல் வளத்தோடு நேயர்களிடம் மிக அன்பாகவும் பாசமாகவும் அதே நேரம் கண்ணியம் மாறாமலும் பேசியதே அவரின் வெற்றிக்குக் காரணம்.
ஆரம்ப காலகட்டத்தில் ரேடியோவோ அல்லது தொலைக்காட்சியோ தொகுப்பாளினிகள் பலர் அப்படித்தான் இருந்தனர்.
ஆனால் இப்போதோ எஃப்.எம் சேனல்களும் தொலைக்காட்சி சேனல்களும் அதிகரித்து விட்ட நிலையில் அவர்களின் கூத்து தாங்க முடியவில்லை.
அரைகுறை ஆடைகளும்,ஆ..ஊ என்ற கூச்சல்களும்,பாகுபாடின்றி கட்டிப் பிடித்தல் ,இடித்தல் போன்ற சேட்டைகளுமாக ரொம்பத்தான் ரகளை கட்டுகிறார்கள்.
சுவாரஸ்யம் வேண்டுமென்பதற்காக எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம்,எப்படி வேண்டுமானாலும் மாமா,மச்சி எனப் பேசலாம் ,மேடையிலேயே கட்டிப் பிடித்து முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நடக்கலாம் எல்லாவற்றையும் இரசிக்க ஆள் இருக்கு என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது.
சேனல்களும் போட்டியான உலகத்தில் ஆடைக் கவர்ச்சி,வார்த்தைகளில் கவர்ச்சி ,செய்கைகளில் கவர்ச்சி இருந்தால்தான் ஒப்பேற்ற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

Wednesday, August 13, 2008

உலக நாயகனும்..குசேலனும்

எல்லோரும் கிழிகிழி ன்னு கிழிச்சி ஓய்ந்த பிறகு நானென்ன புதுசா விமர்சிக்கப் போகிறேன்.
ஆனா முந்தைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி லைட்டான மேட்டர் சொல்லலாம்னுதான்
சினிமா விமர்சனம்.
எத்தனையோ படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.ஆனால் ரஜினி ,கமல் படத்துக்கு மட்டும் ஒரு எதிர்பார்ப்பும் ,வந்த பிறகான விமர்சனமும் விதிவிலக்கு.
சிவாஜி,எம்ஜியாருக்குப் பிறகு இந்த ஜோடிகள்தான் அதிக எதிர்பார்ப்பையும்,இரசிகர் வட்டத்தையும் கொண்டவை.
எல்லாப் படங்களையும் போல வந்து போகும் போது விமர்சனத்தின் கடுமை குறைவாகவே இருக்கும்.
உலகத் தரம்,உலக நாயகன்,உலகம் முழுவது ரிலீஸ் இப்படியான எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்ட பிறகு விமர்சிக்க கழுகுப் பார்வைதான் தேவைப் படுகிறது.

முதல்ல கமலின் தசாவதாரம்;கமலின் உழைப்பு நடிப்பின் மீதான சிரத்தை பற்றி என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை மற்றும் காரெக்டரில் புதுமை புகுத்தியதில் இவரே முன்னோடி.
தசாவதாரத்திலும் அப்படியே.ஆனால் அதை முன்னைக்கு பத்து மடங்கு அதிகமாக செய்திருக்கிறார்.
பத்து வேடங்களிலும் ஒப்பனைக்கும்,பாடி லாங்க்வேஜ்,உச்சரிப்பு என மிக முயன்றிருக்கிறார்.
ஆனால் கதை என்று பார்க்கும் போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றுகிறது.
இதற்கு முன் 'விக்ரம்' னு ஒரு படத்தில் 'மிசைல்' எனப்படும் ஏவுகணை திருடு போவது போன்ற கதை வந்திருக்கிறது.அந்தப் படமும் சரியான மசாலாக் கலவை,சுஜாதாவின் வசனம்,சத்யராஜின் நடிப்பு என ஓடியது.
தசாவதாரத்தில் மிசைலுக்குப் பதில் வைரஸ் அவ்வளவுதான்.
ஆனால் இத்துடன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்து நம்பி வரலாற்றையும் இருபத்தியொராம் நூற்றாண்டின் சுனாமி தாக்குதலையும் சாமர்த்தியாமாக பிணைத்திருப்பதை
யும் கூட பாராட்டலாம்.ஆனால் இதில் கமல் சொல்ல வருவது என்ன?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலே அவருக்கே தெளிவில்லையா?
அது போகட்டும் உலகத் தரம் வாய்ந்த ஒரு படத்தில் என் கண்ணுக்கு புலப்பட்ட சில சொதப்பல்கள்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷு க்கு NaCl னா என்னன்னு தெரியலை. What is NaCl? எனக் கேட்கிறார்.
விஞ்ஞானி கோவிந்த் ஆய்வக குரங்கு 'ஹனு' வைரஸைத் தின்று துடித்துச் சாகும் போது வைரஸ் பரவாமலிருக்க NaCl என்ற பட்டனை அழுத்தி சரி செய்கிறார்.
ஆனால் அதே விஞ்ஞானி படம் முழுக்க வைரஸ் குப்பியை பெருமாள் சிலைக்குள் வைத்துக் கொண்டு எப்படி அழிப்பது எனத் தெரியாமல் விழிக்கும் போது பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் இரு தொழிலாளிகள் உப்பைத் தேய்த்துக் குளிப்பதைப் பார்த்த பிறகுதான்
'ஆ NaCl கிருமி நீக்கும்' என்பதை உணர்ந்து 'இங்கே பீச்சுக்கு எப்படிப் போகனும்' என்கிறார்.கொடுமையே.
அடுத்து வைரஸ் பரவி உலகமே அழியக்கூடாதுன்னு நினைக்கும் பரோபகாரி சுனாமிக் காட்சியில் கடற்கரையில் அங்கும் இங்கும் அல்லோலப் பட்டு மக்கள் ஓடும் பிண்ணனிக் காட்சியில் நாயகி அசினுடன் ஒதுங்கி காதல் பேசுகிறார்.
கடற்கரையில் அத்தனை ஓலமும் அவலமும் நடந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றாமல் தனியாக என்ன வசனம்?
கடைசிவரை புஷ்ஷும் கலைஞரும் ஏன் ஒன்றாக வந்தார்கள் யாரைப் பாராட்டினார்கள் எனத் தெரியவில்லை.
கமலைப் பாராட்டத் தான் அந்த விழா என்றால் கோவிந்த் அப்படியென்ன சாதித்துவிட்டார்?புரியலை.
அது போல கஜல் பாடகர் தொண்டையைத் துளைத்த குண்டு சரியாக 'கான்சர்' இருந்த பகுதியை மட்டும் அழித்து விட்டதால் ஆப்பரேஷன் தேவையில்லையாம்.அப்படி நடக்க சாத்தியமுள்ளதா மருத்துவர்கள்தான் சொல்லனும்.

அடுத்து குசேலன்;
புராணத்தில் நட்புக்கு துரியோதன் -கர்ணன் போல கிருஷ்ணன் - குசேலன் சொல்வார்கள்.
அப்படியொரு குசேல நட்புத்தான் ரஜனியுடையதாம்.ஆனால் அந்த நண்பனுக்காக ஒரே ஒரு காட்சியில் கூட அவர் நினைக்கவோ,பேசவோ செய்யவில்லை.அதெப்படி கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நண்பன் நினைப்பு வருது?
என்னதான் சூப்பர் ஸ்டாரென்றாலும் அத்தனை இசட் பிரிவு பாதுகாப்பும் தனிப் போலீஸ் படையும் தேவையா? மக்களிடம் நேசமாக உள்ள தலைவர்கள் பெரும் மக்கட் படையையே தன் பின்னால் வைத்திருந்த தலைவர்கள் கூட இப்படியொரு பாதுகாப்பு வேண்ட மாட்டார்கள்.
கதைப்படி சூப்பர் ஸ்டார் அஷோக் குமார் அரசியல் தொடர்புடையவரும் இல்லை.
எந்த ஊரில் இப்படியொரு டூரிஸ்ட் பங்களா இருக்கு.அதுவும் மறையூர் போன்ற படு கிராமத்தில் இப்படியொரு செட்டிங் போட்டு பங்களா ஆளுயர மதிற் சுவர்கள் தேவையா?
குசேலன் என்பது நட்பைக் குறிக்கும் கதையாக இருக்கும் பட்சத்தில் இப்படி செட்டிங்,கிராபிக்ஸ் என கண்கட்டு வித்தைகள் மட்டும் இருந்தால் போதுமா?நட்பின் ஆழத்தைக் காட்டும் ஒரு காட்சிகூட இல்லையே?.
நட்பைக் குறித்த அருமையான படங்கள் பல முன்பே வந்திருக்கின்றன.
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட்டில் இப்பவும் வந்து கொண்டுதானிருக்கின்றன.
இந்த இரண்டு படங்களிலும் தரம்,நல்ல கதையம்சம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே.
தங்களின் இரசிகர் வட்டத்தைக் கவர்வதிலும்,ஒரு மாஸ் இமேஜ் உருவாக்குவதிலும் உலகம் முழுக்கப் பேசப்பட வைப்பதிலுமே நோக்கம் இருக்கிறது.
நவீன யுக்திகள்,கணிணி நுட்பங்கள் பிரமிப்பைத் தருகின்றன என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதுதான் உலகின் சிறந்த படம்,உலகின் சிறந்த கதையம்சம் எனச் சொல்லுமளவுக்கு இரண்டிலுமே ஒன்றுமில்லை.
மூன்று மணி நேரத்தை தொய்வில்லாமல் நகர்த்தி,பார்க்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துவதில் உள்ள 'ரிச்னெஸ்' 'ஹீரோயிசம்' மட்டும் நிச்சயம் உண்டு.

Tuesday, August 12, 2008

ஒபிசிட்டியும் ....BMI யும்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.

இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப் பழக்க வழக்கங்கள் பரம்பரை உடல்வாகு என நம் ஆசை நிறைவேறுவதில்லை.

ஓரளவு குண்டாக இருக்கலாம்.ஆனால் ஓபிஸ் [அதிக பருமன்] ஆக இருக்கக் கூடாது.
சிலபேர் சொல்லுவாங்க,'நான் கொஞ்சம் குள்ளம் அதான் குண்டாத் தெரிகிறேன்'
சிலர் நல்ல உயரமா இருப்பதால் எவ்வளவு பருமனாக இருந்தாலும் சட்டெனத் தெரியாது.



LARGER THE WAIST LINE
SHORTER THE LIFE LINE
எனச் சொல்லப் படுகிறது.

ஒல்லியான அல்லது பருமனான உடல்வாகு என்பது பார்க்கின்ற வெளித் தோற்றத்திலேயே தெரியக் கூடியது என்றாலும் உடல்நல அடிப்படையில் பார்த்தால் அதை பிஎம்ஐ எனப்படும் பாடி-மாஸ்-இண்டெக்ஸ் வைத்து கணக்கிட முடியும்.
பிஎம்ஐ என்பது உடம்பு[பாடி வெய்ட்] எடையை உயரத்தின் வர்க்கத்தால் [ஸ்கொயர் ஆப் ஹெய்ட்] வகுத்துக் கிடைப்பது.

BODY WEIGHT/HEIGHT^2= KG/M^2=BMI

இப்ப புதுசா வரும் எல்லா மொபைல் மாடல்களிலும் இந்த BMI அளவைக் காணும் வசதி உள்ளது.நாமே நம் உடல் எடை ,உயரம் கொடுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.ஓரளவு விழிப்புணர்ச்சியாவது கிடைக்கும்.

பிஎம்ஐ மதிப்பு 25 முதல் 29.9 ஆக இருப்பது சராசரி பருமன் எனவும் >30 என்பது ஒபீஸ் எனவும் வரையறுக்கப் பட்டுள்ளது.

உலக ஒபிஸிட்டி விழிப்புணர்வு வாரமாக [world obesity awareness week]ஆக வருடா வருடம் அக்டோபர்15 முதல் 19 வரை கொண்டாடப் படுகிறது.

உலக மக்கட் தொகையில் சுமார் 2.7 பில்லியன் பருமன் கோளாறு உள்ளவர்கள் என்றால் இந்தியாவில் மட்டும் சுமார் 97 மில்லியன் பேர் அதிக உடற்பருமன் கொண்டவர்களாம்.

பொதுவாக உணவுப் பழக்க வழக்கம் உடற்பயிற்சியினமை சோம்பிக் கிடத்தல் காரணமாக இருந்தாலும் மரபணுக் கோளாறும் காரணமாகிறது.
குழந்தைகளைப் பொறுத்த மட்டில் ஜெனெடிக் எனப்படும் மரபணுத் தன்மையால் பருமன் ஏற்பட்டாலும் அவர்களின் உணவுப் பழக்கம்,வாழ்க்கைமுறையே பெரும் காரணமாகிறது.
ஜங்க் புஃட் எனப்படும் அதிக கலோரி கொண்ட சத்தற்ற நொறுக்குத் தீனிகள்,ஐஸ்கிரீம்,பால் பொருட்கள் இனிப்பு வகைகள் அதிகம் உண்பது ,பகல் தூக்கம் முறையான உடற்பயிற்சியின்றி எந்நேரமும் கணிணி விளையாட்டு,வீடியோ கேம்ஸ் ,கார்ட்டூன் சேனல்கள் என ஒரே இடத்தில் பல மணி நேரம் சோம்பிக் கிடப்பதே இளம் வயது ஒபிஸிட்டி க்கு காரணமாகிறது.

பெற்றவர்கள்தான் கடமையுணர்ச்சியோடு புரிய வைத்து நல்ல சத்துள்ள குறைவான கலோரி உணவுப் பொருட்கள்,பழங்கள் சாப்பிடப் பழகவும்,நிறைய நீர் அருந்தவும்,தவறாது உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும்.
பெரியவர்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்களோடு ஆண்களானால்,மது ,புகை,போதை மருந்துகள் போன்ற பழக்கங்கள் சேர்ந்து விடுகின்றன.
பெண்களுக்கு இந்தப் பிரச்சினை பருவமடையும் சமயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.பின்னர் பிள்ளைப் பேறு சமயத்திலும் ,மாதவிடாய் நிற்கும் சமயம் அல்லது மாதவிடாய்க் கோளாறுகளாலும் இந்த உடற்பருமன் அதிகரித்து விடுகிறது.
சிலருக்கு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும் ஹார்மோன் குறைபாடும் காரணமாகிறது.

உடற்பருமன் என்பதை'உடம்புல கொழுப்பு' வச்சிடுச்சு எனக் கொச்சையாகச் சொன்னாலும் உண்மை அதுதான்.
கொழுப்பு என்பது நம் உடலில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் ஆற்றல்.நம் உடல் இயக்கங்களுக்கு வேண்டிய போது செலவிடப் படுகிறது.சொல்லப்போனால் உடலுக்கு வழுவழு தன்மையையும் அழகையும் கொடுக்கிறது.
ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் ஒபிஸிட்டியாகிறது.
உடலில் சராசரியாக 30-35 பில்லியன் கொழுப்பு செல்கள் உள்ளன.நாம் எடை கூடும்போது அவைகளின் எண்ணிக்கையும் உருவளவும் அதிகரிக்கிறது.
பின்னர் எடைக் குறைக்க முற்படும்போது உருவளவு சுருங்குமே தவிர உண்டான செல்களின் எண்ணிக்கை குறவதில்லை.

இப்படிச் சேரும் கொழுப்பு பல வியாதிகளுக்கு கட்டியம் கூறுகிறது.
ஸ்ட்ரோக் எனப்படும் திடீர் அடைப்பு,இதய நோய்கள்,சர்க்கரை வியாதி,கணையக் கோளாறுகள்,ஹார்மோன் அளவில் மாறுபாடு,மூட்டுவலி,வயிறு மற்றும் மலக்குடல் கேன்சர்,கல்லீரல் கெடுதல்,டிஸ்லிப்பிடிமியா எனப்படும் இரத்தத்தில் அதிக கொழுப்பு அல்லது டிரைகிளிசெரைடு எனப்படும் மாரடைப்புக்கு காரணமான கொழுப்பு போன்றவை அதிகமாகிறது.

உடற்பருமனைக் குறைக்க மாத்திரை மருந்து,ஸ்டீம் அல்லது ஆயில் மசாஜ் னு பல வழிகளோடு அறுவை சிகிச்சை முறைகளும் நவீனமாக்கப் பட்டிருந்தாலும் , நல்ல உணவுப் பழக்கத்தோடு நடைப் பயிற்சி,யோகா,நீச்சல்,ஓட்டப் பயிற்சி என உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இயற்கையான முறையில் உடற் பருமனைக் குறைக்க கையாளும் முறைகளே பக்க விளைவுகள் இல்லாத நன்மை பயக்கும்.

Monday, August 11, 2008

கிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]

உடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.
ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.
அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும் உண்டு.ஆனால் என்ன உணவை உண்கிறோம் எப்படி உண்கிறோம் என்பதில்தான் அதை நாம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
இன்று 100க்கு 80 சதவீதம் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களே.
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபியோ டீயோ கொடுக்கும் போது தவறாமல் கேட்பது சர்க்கரை சேர்க்கவா வேண்டாமா என்பதே.
இது மருத்துவம் சார்ந்த கட்டுரையோ சர்க்கரை வியாதிக்கான தீர்வோ இல்லை.
சர்க்கரையை கட்டுப்படுத்த அல்லது அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவு உணவுப் பொருட்கள் குறித்ததே.
கார்போஹைட்ரேட்ஸில் நல்லவை கெட்டவை னு தரம் உண்டு.

ஒரு மாவுப் பொருள் உட்கொள்ளப் பட்ட பிறகு வேதியியல் மாற்றத்தால் சிதைவுற்று குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைப் பொருளாக மாறி இரத்தத்தில் எந்த அளவு எவ்வளவு வேகமாக கலக்கிறது என்பதையே இந்த 'கிளைசெமிக் குறியீடு' காட்டுகிறது.
இதுவே GI index எனப் படுகிறது.

குளுக்கோஸின் குறியீட்டை 100 எனக் கொண்டு மாவுச் சத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவை வைத்தே நல்ல கார்போஹைட்ரேட்ஸ் கெட்டவை எனப் பிரிக்கப் படுகிறது.

கிளைசெமிக் குறியீடு 55 வரை உள்ளவை குறைந்த GI வகை 56-69 வரை
உள்ளவை நடுத்தரமானவ 70 க்கு மேற்பட்டவை அதிக GI உள்ளவை.
GI அதிகமாக உள்ள உணவுகள் விரைவில் செரித்து இரத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் உடனடியான சக்தி உடலுக்குக் கிடைத்தாலும் அந்த அதிகப் படியான சர்க்கரையை சமன் செய்ய இன்சுலின் சுரப்பும் அவசியமாகிறது.தேவைக்கு அதிகமான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்படுகிறது.

சீரியல் ,பாஸ்தா,வேகவைத்த உருளைக்கிழங்கு,சோடாபானங்கள்,அரிசி, அடுமனை உணவுகள் வொய்ட் பிரட் போன்றவைகளின் கிளைசெமிக் குறியீடு அதிகம்.
பாப்கார்ன்,ஓட்ஸ்,வாழப்பழம்,அன்னாசி பாஸ்மதி,மூல்கிரி அரிசி இவைகளில் GI மிதமாக உள்ளது.
முழுதானியங்கள்,பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,கொழுப்பு நீக்கப்பட்ட பால் இவற்றில் 50 க்கும் குறைவாக உள்ளது.

இந்த கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ள உணவை உண்பதால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு
,உயர் இரத்த அழுத்தம்,இரத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்தல்,உடல் பருமன்,அளவுக்கதிகமான பசி உணர்வு ஏற்படுதலோடு கான்சருக்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.
காலில் இறக்கைக் கட்டி பறக்கும் அவசர யுகத்தில் இதை எல்லாம் கவனிக்க நேரமெங்கே என நினைப்போம்,
சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் போல அதிக GIஉள்ள உணவோடு குறைந்த GI உள்ளதை சேர்த்து சாப்பிடும்போது சமனப் படுகிறது.
பாஸ்தா நூடூல்ஸோடு கொஞ்சம் சாலட்,காலை நேரத்து சீரியலோடு கொஞ்சம் ஓட்ஸ் பார்லி அல்லது ஸ்ட்ராபெர்ரி இப்படி பழகலாம்.

எந்த விதமான கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுகிறோம் என்பதை விட எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் சேர்ந்தே நம் உணவின் GI அளவை நிர்ணயிக்கிறது.
அதிக நேரம் சமைக்கப்படும் உணவுகளின் நார்ச் சத்தின் தன்மை மாறி அதன் குறியீட்டு அளவும் மாறிவிடுகிறது.உடனடியாக செரிக்கப் பட்டு உணவில் சர்க்கரையின் அளவை துரிதமாக அதிகப் படுத்துகிறது.
இந்த கிளைசெமிக் குறியீட்டை மாற்றக் கூடிய காரணிகள்
1.ஓரே நேரத்தில் எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடுகிறோம்
2.எப்படி சமைக்கப் பட்டிருக்கிறது
3.உடலின் உணவை ஏற்றுக் கொள்ளும் தன்மை
4.எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே.

சர்க்கரை நோயின் தாக்கம் எத்தனை கொடியது என்பது தெரியும்.அதனால் இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம் என்பதாலேயே இந்தப் பதிவு.
மேலும் விபரமறிய வலையில் நிறைய தளங்கள் உள்ளன.

நட்சத்திர வணக்கம்

அறிமுகத்தில் சொல்லியபடி அதிகமாக எழுதும் பதிவர் இல்லை.
எழுதும் பதிவுகளில் ஏதேனும் செய்தி இருக்க வேண்டும் என்பது ஆசை.
பெரும்பாலும் நாளிதழ்,தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையிலேயே என் பதிவுகள் அமையும்.
பலரும் அறிந்த செய்திகளாக இருந்தாலும் எனக்கு மனதில் பட்டவைகளைப் பதிவாக்குகிறேன்.
குறைவான பதிவுளே எழுதியிருந்தாலும் பழம்பெரும் பதிவர் :))))))) என்ற அடிப்படையில் கால ஓட்டத்தின் சுழற்சியில் தமிழ்மண நட்சத்திரமாகி விட்டேன்.
நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி
தமிழ்மண அன்பர்களுக்கு நட்சத்திர வணக்கங்கள்.

Saturday, August 09, 2008

சிரிக்க...சிந்திக்க..இரசிக்க

மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.

ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து விட்டார்

இரண்டாவது ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்

மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்

'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'


ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.
'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'
டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்'
வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'
டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.
வயதானவர்:எனக்கு முதுகு வலி'
டாக்டர்:'வயசாயிடுச்சில்ல'
'என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.
டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'



ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..

7 GB ஹார்ட் டிஸ்க் காலனி
புதுக்கோட்டையில் இருந்து வைரஸ்
காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்க
வைரஸை வேட்டையாடு விளையாடு
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
ஒரு மவுஸின் கதை