Tuesday, November 13, 2007

Nimesulide....தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகள்....

கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம்
என்ற என் பிரார்த்தனை நேரம் வலைப் பதிவில் தடை செய்யப்பட்ட மாத்திரையான nimesulide என்ற வலிநிவாரணி மருந்தை [antipyretic and analgesic] டாக்டரின் ஆலோசனையின்றி உட்கொண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் என்ற 31 வயதேயான இளைஞரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த நிமிசுலைடு வகை மருந்துகள் NONSTEROID ANTI-INFLAMATORY DRUG [NAID] வகையைச் சேர்ந்த மருந்துகளாகும்.

உலகின் தலைசிறந்த 5 வலிநிவாரணிகளில் ஒன்றாக கருதப் பட்டாலும் கல்லீரல் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இதனுடைய பயங்கரமான பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் இதை தடை செய்து விட்டன.

2001lலேயே ஸ்பெயின்,பின்லாண்ட் போன்ற நாடுகள் இம்மருந்தை தடை செய்து விட்டன.அதன் பின்னர் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகளும் சிங்கப்பூர்,பங்களாதேஷ்ம் கூட தடை செய்து விட்டிருந்தாலும் இந்தியாவில் மட்டும் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகம் இதை தடை செய்ய வேண்டிய அவசியத்தை மிக மெதுவாகவும் தாமதமாகவுமே உணர்ந்திருக்கிறது.எனினும் இன்னும் முழுமையாகத் தடை செய்யப் படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இம்மருந்து 80 க்கும் மேற்பட்ட வகைகளில் [பெயர்களில்] விற்பனையில் உள்ளதாம்.
அதில் நைஸ்,நிமிலைடு [NISE,NIMILID] பெயர்களில் அதிகம் விற்பனையாகிறது.

மேலும் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பாராசிடமால்[paracetamol]எனப்படும் ஜூர மருந்து வகைகளோடு சேர்க்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

ஜுரம் மற்றும் அதிகப்படியான வலிக்கு மருந்தாக அளிக்கப் படுகிறது.

மற்ற நாடுகளில் தடை செய்யப் பட்டது இங்கு மட்டும் புழக்கத்தில் இருக்க மக்கள் மற்றும் பல மருத்துவர்களின் விழிப்புணர்ச்சியின்மையும் ,அரசியல் ஆதாயங்களும், வியாபார நோக்குமே காரரணம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சுயமருத்துவம் [self medication]செய்து கொள்ளும் நம்முடைய அதி மேதாவி போக்கும் ஒரு காரணம்.படிக்காதவர்கள் மட்டுமில்லாது மெத்தப் படித்தவர்களிடமும் இந்த அலட்சியப் போக்குக் காணப்படுவதற்கு கார்த்திக் ஒரு உதாரணமாகி விட்டார். இனியாவது விழிப்புணர்வு பெறுவோம்.
கீழே சில தடைசெய்யப்பட்ட மருந்துகளின் அடிப்படை வேதிப் பொருட்கள் அவற்றின் பயன்பாடு அவற்றால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் அவை என்ன பெயர்களில் கிடைக்கின்றன என்ற விபரம் கொடுக்கப் பட்டுள்ளது.

Generic name
Use
Reason for ban
Brand names(s)
1. Analgin
Pain-killer
Bone-marrow depression
Novalgin, Baralgan

2. Cisapride
Acidity, constipation
Irregular heart beat
Ciza, Syspride
3. Droperidol
Anti-depressant
Irregular heart beat
Droperol
4. Furazolidone
Anti-diarrhoeal
Cancer
Furoxone, Lomofen
*
5. Nimesulide
Pain-killer, fever
Liver failure
Nise, Nimulid
6. Nitrofurazone
Anti-bacterial cream
Cancer
Furacin, Emfurazone
,
7. Phenolphthalein
Laxative
Cancer
Jetomisol-P*
8. Phenylpropanolamine
Cold & cough
Stroke
D'Cold*, Vicks Action 500*
9. Oxyphenbutazone
NSAID
Bone marrow depression
Sioril
10. Piperazine
Anti-worms
Nerve damage
Piperazine, Helmazan*
11. Quiniodochlor
Anti-diarrhoeal
Damage to sight
Enteroquinol



  • * Denotes it is a combination product.Analgin, Furazolidone and Nitrofurazone are banned for use even in animals in the United States.Analgin is banned even in Nepal, Vietnam and Nigeria (Reference: MIMS INDIA, September, 2005)

  • Sunday, May 27, 2007

    மலரும் குடும்ப உறவுகள் விரியும் அன்பின் சிறகுகள்

    குடும்பம் என்பது ஒரு அழகான தோட்டம்.உறவுகள் அங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள்.
    எந்த ஒரு குடும்பத்திலும் பெற்றவர்கள் பிள்ளைகள் மீதும் பிள்ளைகள் பெற்றவர் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டிருப்பது இயற்கையே.

    ஆனால் அதை எத்தனை குடும்பங்களில் பரஸ்பரம் வெளிப்படுத்தவோ,பகிர்ந்து கொள்ளவோ செய்கின்றனர்?

    இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும்,படிப்பு,பணம் சம்பாதித்தல் என்றுமாகவே பெரும் பொழுது கழிந்து விடுகிறது.

    காலையில் சீக்கிரமாகக் கிளம்பிப் போதலும் இரவில் நேரங்கழித்து வருதலும் இருக்கும் போது குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசவோ மகிழ்ந்திருக்கவோ பொழுதிருப்பதில்லை.

    விடுமுறை நாட்கள் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்பதும் அல்லது நண்பர்களுடன் கிரிக்கெட் என்றும் செலவிடப் படுகிறது.தந்தைக்கு நண்பருடன் அரட்டை அடிக்கவும் தாய்க்கு டி.வியிலும் பொழுது போகிறது.

    எல்லோருமே இப்படியிருப்பதில்லை என்றாலும் பெரும்பாலான குடும்பத்தில் இது வாடிக்கைததானே.

    பழங்கதைகள் பேசுவதும் மலரும் நினைவுகளும் சுகமானவை.

    தன் பெற்றோர் சின்ன பிள்ளைகளாக இருந்த போது என்னென்ன குறும்பு செய்தார்கள் என்று தாத்தா பாட்டி வாயால் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

    எல்லோரும் கூடி நிலாச் சோறு சாப்பிட்டதுண்டா?

    அம்மா அன்னத்துடன் அன்பையும் பிசைந்து உருட்டித் தந்த உருண்டைச் சோறு ருசித்ததுண்டா?

    ஆம் எனில்,நாம் சிறுவர்களாய் இருந்தபோது அனுபவித்த அந்த இன்பம் நம் பிள்ளைகளுக்கும் தானே கிடைக்க வேண்டும்.

    கேலியும்,கிண்டலும் , ஆட்டமும் ,பாட்டும் ,போட்டிகளும் விளையாட்டும் ஏதோ விஷேஷ நாட்களில் கூடியிருக்கும் போது மட்டுமா?

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வாய்ப்பை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்

    குடும்பம் மொத்தமும் கூடிப் பேசி மகிழும் தருணங்கள் விலை மதிக்க முடியாத சொர்க்க நேரங்கள்.

    சிறு வயதில் நாம் பட்ட துன்பம்,பணப் பற்றாக் குறை பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கம் தப்பில்லை ஆனால் அதற்காக விலை மதிக்க முடியாத தருணங்களையும் சந்தோஷத்தையும் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லாத வகையில் வாழ்க்கையை இயந்திரத்தனமாக்கிக் கொள்ள வேண்டுமா?

    ஆளுக்கொரு நேரத்தில் உண்டு ஆளுக்கொரு நேரத்தில் உறங்கி எழுந்து ஒரே வீட்டில்
    ஒருவர்முகத்தை மற்றவர் பார்க்கக் கூட நேரமின்றி,விடுமுறை நாட்களில் வாய்ப்பு அமைந்தால் ஏதோ திரு விழாவுக்கு வந்த உறவினரைப் பார்ப்பது போல பார்க்கும் அவலம் இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    வாழ்க்கையின் போக்கை அடியோடு மாற்ற முடியாதாயினும் ,கொஞ்சம் அனுசரித்து நேரம் ஒதுக்கி உறவுகளோடு சேர்ந்திருக்க முனையலாமே?

    ஓடி ஓடி உழைப்பதே குடும்பத்திற்காகத்தானே என வாதிடலாம்.ஆனால் அந்தந்த தருணங்களின் சந்தோஷத்தை அப்போதைக்கப்போதே அனுபவிக்க நேரமில்லாமல் சம்பாதித்து என்ன பயன்?

    மழலையின் பேச்சும்,குழந்தைகளின் கொஞ்சு மொழியும் குறும்புகளும் ஒத்திப் போட்டு சாவகாசமாக ரசிக்கவா?

    எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அப்பா EB யிலும் அம்மா வெளியூரில் ஒரு பள்ளியிலும் வேலை பார்க்கின்றனர்.பையன் +2 படித்துக் கொண்டிருந்தான்.

    தினமும் மதியம் வீட்டுக்கு வரும் தந்தை மகன் சாப்பிட்ட தட்டைப் பார்த்து நேர நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு பள்ளிக்குப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க ,
    அவனோ நண்பர்களுடன் பொழுது போக்கி , பள்ளிக்கே போகாமல் அட்டெண்டென்ஸ் குறைவால் பரீட்சையே எழுத முடியாமல் போனது.

    சாப்பிட்ட தட்டு இருக்கிறதா பையன் வீட்டுக்கு வந்தானா எனப் பார்த்த தந்தை அவன் வேறு என்ன செய்கிறான் எனக் கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை.யாருக்காக பாடுபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அவன் படிப்பும் எதிர்காலமும் தான் பாழாய்ப் போனது.

    ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கொண்டே தனித் தனி தீவுகள் போல அவரவர் வேலை அவர்க்கு என்ற வாழ்க்கையில் சலிப்பு மட்டுமே மிஞ்சும்.

    கூடியிருக்கவும்,குலவி மகிழவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி உறவுகளின் அன்பில் திளைத்து,சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டால் விரிசலுக்கும் பூசலுக்கும் இடமிருக்காது.

    வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும்.

    Wednesday, April 11, 2007

    மனதைப் பாதித்த மரணங்கள்

    மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.

    சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில் நடித்தவர்.டான்ஸ் ஆடுவதற்கான காலேயில்லாமல் டான்ஸ் ஆடியவர்.ஆக்ஸிடெண்டில் பறிபோன ஒற்றைக் காலுடன் டான்ஸ் ஆடி பலரின் கவனத்தையும் கவர்ந்தவர். இயக்குனர் கேயாரின் 'டான்ஸர்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல் ஐந்தாயிரத்திற்கும் மேல் 'ஸ்டேஜ் ஷோ'க்களில் ஆடியவர் இந்த மாதம் பரமக்குடியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு ஆடப்போன இடத்தில் அவர் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொது 'பேலன்ஸ்' தவறி விழுந்து இறந்து விட்டார்.
    ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அதே ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்யத் தோற்று மரணத்தை அழைத்த கொடுமையை என்னென்பது?

    இன்னொரு அநியாய மரணம் 'செண்டூர்' வெடிவிபத்து.சாலையோர டீக்கடையில் நின்றவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே உயிர்விட்ட மக்கள்.எல்லவற்றிலும் தலை விரித்தாடும் அரசியல் சுயநலம் செல்வாக்கால் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அப்பாவிகளின் உயிர் குடித்த அவலம்.

    படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட இத்தகைய கொடூர மரணங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நேரடிக்காட்சியாக ஒளிபரப்பப் பட்ட பாகனின் மரணம்.திருவிழாவுக்கான ஒளிபரப்பாக இருந்தாலும் இப்படியொரு கொடுமையைத் தொடர்ந்து படம் பிடித்த அந்தக் கொடுமையை என்ன சொல்வது.துணியைப்போல துவைத்துப் போடப்பட்ட அந்த பாகனின் அலறல் இன்னமும் ஒலிப்பதுபோல் இருக்கிறது.எதிர்பாராமல் நடந்த ஒன்று என்றாலும் அதை ஒளிபரப்பத்தான் வேண்டுமா?
    இப்படி பல யானைகளை வைத்து விழா நடத்தும் இடத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.இந்த நிகழ்வுக்குப் பிறகே வன அலுவலர்கள் மயக்க மருந்தை துப்பாக்கியில் பிரயோகித்து மதம் கொண்ட யானையை அடக்கியிருக்கின்றனர்.
    வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளே சில நேரம் கட்டுக்கடங்காத போது இத்தகைய பெரிய வனவிலங்குகள் நாட்டிற்குள் தேவையா? யானை ஒரு மங்களகரமான ,பூஜிக்க தக்க ஒன்றாகவே இருப்பினும் அதை வைத்துப் பராமரிப்பதும் பொது இடங்களில் அழைத்து வருவதும் தேவையா?
    யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.
    வனவிலங்கு சரணாலயங்களிலும் காட்டிலும் இருக்க வேண்டியவை அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சூழலில் வசிப்பதும்,பல துன்புறுத்தல்களுக்கு உட்படுவதும் அவைகளை மூர்க்கமடைய வைக்கிறது.பக்தி இருக்க வேண்டியதுதான் அது இத்தகைய அவலங்களுக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

    பாரதி தொடங்கி இந்த விபரீதம் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

    Sunday, April 08, 2007

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா???

    கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை..
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று..
    இது கமல் ஒரு படத்தில் பாடும் பாடல்.

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது பழைய வழக்கு.
    சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,மண்டபத்திலோ கோயிலிலோ உறுதிபடுத்தப் பட்டு நீதிமன்றங்களில் முடிவுக்கு வருகின்றன என்பது இன்றைய நடைமுறை.

    முன்பெல்லாம் திருமணம் பால்யத்திலே செய்யப்பட்டு பெண்கள் வயதுக்கு வரும்வரை பிறந்த வீட்டிலிருந்துவிட்டு பூப்பெய்திய பின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

    இன்னாளில் பால்ய விவாகங்கள் இல்லையென்றாலும் , சிதம்பரத்து தீட்ஷிதர் குடும்பங்களில் சபையில் பூஜை செய்யும் தகுதி வேண்டி இன்னமும் நடைமுறையில் உள்ளது.

    இப்போதெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களில் எழுதும் அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. திருமணச் சடங்குகளும் பல வழிகளில் முற்போக்குச் சிந்தனையுடன் மாற்றம் கண்டிருக்கின்றன.

    முன்பெல்லாம் பெற்றவர் நிச்சயித்து பெரும்பாலும் அத்தை,மாமன்வழி உறவுகளிலேயே திருமணம் முடிப்பர்.பெண்கள் திருமணம்வரை மாப்பிள்ளை முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.என் உறவுக்கார பாட்டியைப் பற்றி கிண்டலாகச் சொல்வார்கள்,'பாட்டி தாத்தா முகத்தக் கூட நேரா பார்க்கமாட்டாள் ஆனாலும் பத்து புள்ளை பெற்றுவிட்டாள்' என்று.

    அதற்குப் பிறகு காதல் திருமணங்கள் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியபோதும் பரவலாக வரவேற்கப்பட்டே வந்திருக்கிறது.காதலில்தான் இப்போது எத்தனைவகை.
    பார்த்த காதல்,பார்க்காத காதல் ,கேட்ட காதல்,கேட்காத காதல் ,போன் காதல்,இண்டெர்நெட் காதல் என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    நிச்சயிக்கப்பட்டதோ அல்லது காதல்வகைப் பட்டதோ
    அந்த திருமண முறைகளில் எத்துணை முன்னேற்றம்.

    பத்து நாள் நடக்கும் கல்யாண கலாட்டக்கள் இப்போது அரிது.எழுத்தாளர் சாவியின்'வாஷிங்டனில் திருமணம்' படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளை அறிவர்.
    இப்போது இரண்டே நாள். முதல்நாள் ரிசப்ஷன் மறுநாள் கல்யாணம் மூன்றாம் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் அமெரிக்காவில் என்றாகிவிட்டது.

    சாத்திர சம்பிரதாயங்களோடு செய்யப்படும் திருமணங்கள்

    சீர்திருத்த முறைப்படி மந்திரம் ஓதாமல் பெரியவர்கள் ஆசியுடன் செய்யப்படும் திருமணங்கள்

    வாழ்க்கைத்துணை ஒப்பந்த என்ற முறைப்படி மணமக்கள் திருமண உறுதிமொழி எடுத்து செய்யப்படும் தமிழர் திருமணமுறைகள்

    இரண்டே இரண்டு சாட்சிக் கையெழுத்துக்களுடன் நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்

    இப்போது புதிதாக இன்னொரு புரட்சியாக வந்திருக்கும் 'டைனமிக்'திருமணச் சடங்குகள் [மாப்பிள்ளை வீட்டார்,மணப்பெண் வீட்டார் அனைவரும் வயது வித்தியாசமின்றி கட்டி அணைத்து உறவு பாராட்டுவதுதான் 'டைனமிக்கின் சிறப்பம்சம்']

    இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல இன்னொரு புதிய திருமணக் கலாச்சாரம்
    ஆரம்பித்திருக்கிறது.

    அதுதான்'லிவிங் டுகெதர்' முறை.

    திருமணம் செய்யாமலே ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழும் முறை.ஒரு வயது வந்த பெண் ஆடவருடன் பேசினாலே கதைகட்ட காத்திருக்கும் இந்த சமுதாயத்தில் 'லிவிங் டுகெதர்' என்பதற்கு மிகுந்த மனத்திண்மை வேண்டும்.மேல் நாடுகளில் இது சர்வசாதாரணமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் இது இன்னமும் ஏற்புடையதல்ல.

    இருப்பினும் அங்கொன்று இங்கொன்றென சிலர் அவ்வாறு வாழ்கின்றனர்.சமீப காலத்தில் ஒரு சின்னத்திரை ஜோடி [ராஜ் கமல்-பூஜா] இது பற்றி பேட்டியும் கொடுத்திருந்தனர்.

    அனைவருக்கும் பரிச்சயமான இன்னொரு மூத்த கலையுலக ஜோடி
    கமல்-கௌதமி.இருவரும் இருவரின் பிள்ளைகளோடும் ஒன்றாய் வாழ்வதைப் பார்க்கும்பொது எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

    'உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும்
    நம் பிள்ளைகளோடு
    விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'

    திருமண பந்தம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதல்ல பிரச்சினை.நிச்சயிக்கப்பட்ட பந்தமோ
    காதல் திருமணமோ,தாலிகட்டாத சீர்திருத்த கல்யாணமோ அல்லது ல்விங் டுகெதர் முறையோ எதுவாயினும் தம்பதியர் எவ்வாறு வாழ்கின்றனர்.தம் மணவாழ்வில் திருப்தியடைகின்றனரா?கருத்தொருமித்து அனுசரித்துப் போகின்றனரா
    என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
    எத்தனைச் சீக்கிரம் ஒரு பந்தம் உருவாகிறதோ
    அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டுவிடுகிறது.

    காதல் திருமணம் என்றால் அப்படித்தான் என்றும்,இல்லை நிச்சயிக்கப் பட்டதில் புரிதல் இருக்காது அதுதான் காரணம் என்றும் பட்டிமன்ற விவாதத்திற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம் .ஆனால் பிரிவதற்காகவா ஒரு பந்தம்?

    சீதா,நளினி சரிதா,பிரசாந்த்,சொர்ணமால்யா என்று கலைத்துறையினர் மட்டுமல்ல சாதாரண நடுத்தரவர்க்கமும் குடும்பநல கோர்ட் ஏறிக் கொண்டுதானிருக்கிறது.
    இதற்கு என்னதான் தீர்வு?பலமுறை யோசித்து ஒருவர் குணம் மற்றவருக்கு உடன்பாடானதா என்று அறிந்து திருமணபந்தம் ஏற்படவேண்டும்.அதற்காக நமக்கு ,நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத லிவிங் டூகெதர் முறை சரியென்று சொல்லவில்லை.தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்

    'ஒத்த கருத்துடையவராக இல்லாத போதும்
    ஒத்துப் போகும் தன்மை இருக்க வேண்டும்'

    அப்போதுதான் திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.

    Friday, March 30, 2007

    கல்வி நிலையங்களா..கொலைக் கூடாரங்களா?

    மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.
    கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான்கள் கொலைகாரக் கொடூரனாகிவிடுகின்றனர் பல நேரங்களில்.
    இரண்டு தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலை பொறியியற்புல மாணவியின் தற்கொலையும் அது தொடர்பான செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    காப்பியடித்ததால் பிடிபட்டு அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப் பட்டாலும்,ஆசிரியரின் தவறான செயலே காரணம் என்கின்றனர்.சோதனத் தேர்வின் போது காப்பியடிப்பதாக சந்தேகப் பட்ட ஆசிரியர் மாணவியின் ஓவர் கோட்டில் கைவிட்டு 'பிட்' எடுப்பதாக் கூறி முறைகேடாக நடத்திய அவமானம் மாணவியின் உயிருக்கு உலையானதாகவும் பேச்சு.
    இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு,பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்திருக்கின்றனர்.
    கல்விக்கூடங்கள் என்பவை கல்வியோடு பண்பையும்,ஒழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும் வளர்க்கவே என்ற சூழல் மாறி, படிக்கப் போகும் பிள்ளைகள் படித்து முடித்து முழுதாகத் திரும்புவார்களா என்ற அச்சமே இப்போது பிரதானமாகி விட்டது.
    ஆசிரியர்களின் கவனக் குறைவினால் பிஞ்சிலே கருகிய நூற்றுக்கனக்கான கும்பகோணம் குழந்தகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.
    பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து பலி,மேற்கூறை விழுந்து பலி என இன்னமும்,இன்னமுமே தொடர்ந்து கொண்டுதானிருக்கிற்து.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு மாணவர்களின் உயி பறிக்கும் எமனாக மாறி வருகின்றனர்.
    தன் வகுப்பு மாணவியின் பணம் திருடு போனதால் சந்தேகப் பட்டு துணிகளைக் களைய வைத்து அவமானப் பட்ட ஒரு 6ம் வகுப்பு மாணவி விஷம் அருந்திச் சாவு
    ஆசிரியர் கண்மண் தெரியாமல் அடித்த்தால் மாணவன் சாவு
    ஆசிரியர் அசிங்கமாகத் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை.
    ஒரு தொழிற்கல்வி பள்ளியில் மாணவருக்கு வந்த வேலை வாய்ப்புக்கான உத்தரவை ,மாணவன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் ஆசிரியர் தர மறுத்ததால் மாணவர் விஷம் குடித்து மரணம்.
    தன்னைக் காதலிக்க மறுத்த சக மாணவியைத் துரத்தியடித்ததில் மாடிப் படிகளில் உருண்டு வீழ்ந்து மரணம்.
    பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டு கொலையான மாணவி கிணற்றில் மிதந்தார்.
    இப்படி ஒன்றல்ல பலப் பல என அடுக்கிக் கொண்டே போகலாம்.
    எங்கே போய்க் கொண்டிருக்கிறது கல்வியின் தரம்.அந்தக் காலகுருகுல முறையில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம்,பண்பாடு,கலாச்சாரம்,விசுவாசம் கிஞ்சித்தும் இந்த கனிணி யுகத்தில் இல்லை.
    தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும்,பாலியல் வன் கொடுமைகளும்,கலாச்சார சீர்கேடுகளுமே
    பிரதானப்பட்டு கல்விக் கூடங்கள் கொலைகாரர்களின் கூடாரமாகி வருகிறது.
    'சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் தோலை உரித்துவிடுங்கள்,என்று மிரட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோரே அனுமதி வழங்கியது ஒரு காலகட்டம். மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து உரிமையெடுக்க தரப்பட்ட அனுமதி.
    இன்றோ சொந்த விறுப்பு,வெறுப்புக்காக மாணவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதைத் தடுக்க அரசே சட்டம் இயற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை.
    ஆயிரம் கனவுகளோடு ,மிகுந்த சிரமப்பட்டு படிக்கக் கிடைக்கும் வாய்ப்பைத் தொடர முடியாமல் இன்னும் எத்தனை 'சேத்னா'க்களும்,'நாவரசன்'களும் கொல்லப் படுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது.
    ராகிங் என்ற பெயரில் ஆரம்பித்த கொடுமைகள் நீண்டு,பாலியல்,விரோதம்,காதல்தோல்வி என் கிளைப் பரப்பி விஷ விருட்சமாக வேறுன்றி விட்டது.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு குரோதம் பாராட்டி சிக்கலை அதிகமாக்குகின்றனர்.
    விடலைப் பருவத்திற்கே உரித்தான அவசர புத்தி,நிலையற்ற மனோபாவம் மாணவர்களை சில வினாடி உந்துதலில் உயிரை மாய்க்கும் முடிவிற்கு தள்ளிவிடுகிறது.
    இதுநாள் வரைப் போற்றிப் பாதுகாத்த பெற்றோர்,அரிதாகக் கிடைத்த கல்வி வாய்ப்பை மறந்து விட்டு யாரோ ஒரு சிலரின் பேச்சுக்கும்,ஏச்சுக்கும் அவமானப் பட்டு உயிரை மாய்க்கும் அவலம் பெருகி வருகிறது.
    உடனடித்தேவை சட்டங்கள் மட்டும் அல்ல முறையான வழி நடத்துதலும்.
    பரஸ்பர புரிந்து கொள்ளுதலும்,செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் போக்கும் வரும்வரை எந்த சட்டங்களும் நிலையான தீர்வளிக்க முடியாது.

    Thursday, March 08, 2007

    டெஸ்ட் டியூப் பேபிகள்

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
    இந்த நாளில் மகளிர் பிரச்சனைகள் அதற்கான பதிவுகள் என்பதே என் விருப்பம்.
    பெண்மையின் தவம் தாய்மை என்றால்
    அந்த தவத்தின் வரம் தான் மக்கட் பேறு.
    எதனையோப் பேருக்கு அந்த இயற்கையின் ஆசீர்வாதம் கிடைக்காமலேப் போகிறது.
    இந்த இடத்தில் என் மனம் கவர்ந்த ஒரு பழையத் திரைப் பாடலைப் பற்றிச் சொல்ல ஆசைப் படுகிறேன்.மேலோட்டமாகப் பார்க்கும் போது கொஞ்சமே விரசமாகத் தெரிந்தாலும் கவியரசரின் அந்த கவிதை வரிகளிலும் அர்த்தத்திலும் மனம் மயங்கிப் போகிறது.
    'பார் மகளே பார்'என்ற படத்தில் சிவாஜியும்,சௌகாரும் பாடும் பாடல்.அவ்விருவரின் அழகும் காட்சி அமைப்பும் பாடலுக்கு மேலும் அழகூட்டும்
    நீரோடும் வைகையிலே.........எனத் தொடங்கும் பாடலின் வரிகள்
    ''நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
    கட்டிலின் மேலே
    அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
    தொட்டிலின் மேலே
    வாரிரோ ஆரிரோ ஆராரோ''
    தாம்பத்யத்தின் இந்த தவமும் வரமும் கிடைக்காத எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
    சமுதாயத்தின் முன் இவர்களே குற்றவாளிகளாகவும் முன்னிறுத்தப் படுகின்றனர்.பெண்ணுரிமையின் முதல் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பிக்கிறது.இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு அடிகோலும் என்பதாலேயே என்னுடைய பெண்ணுரிமைப் பதிவுகளில் இதைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.
    இயற்கை வஞ்சித்தாலும் அறிவியல் நுட்பங்கள் இம்மாதிரி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதில் வளர்ச்சி கண்டிருக்கிறது.
    'டெஸ்ட் டியூப் பேபி' எனப்படும் சோதனைக் குழாய் குழந்தைகள் ஒரு காலத்தில் ஏதோ பாவம் போலவும் ,நெறி பிறழ்தல் போலவும் கருதப் பட்டன.இன்று ஓரளவ பரவலாக அறியப்பட்ட போதும்,இன்னமும் முழுமையாக அதைப் பற்றிய 'தெளிவு' படித்தவர்கள் மத்தியிலேயே காணப்படவில்லை.

    பிறவி அல்லது பரம்பரைக் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்குதலினாலோ
    இயற்கையாக 'சூல்' கொள்ள முடியாத ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே அவளின் சினை முட்டையையும்[egg],அவள் கணவனின் உயிரணுவையும்[sperm] கலக்கச் செது உருவாகும் 'கருமுட்டை'[fertilised egg or zygote]யை மீண்டும் அவளின் கருவகத்தில் செலுத்தி வளரச் செய்து பிறக்கும் குழந்தைதான் 'டெஸ்ட் டியூப் பேபி'
    .

    பலர் இன்னமும் ஏதொ முழுக்குழந்தையுமே 10 மாததிற்கு ஒரு பெரிய சோதனைக் குழாயிலேயே வளரும் என்று கூட நினைக்கின்றனர்.
    கரு உருவாகும் சூழ்நிலையில் இல்லாத 'சூலகங்கள்'[UTERES] ஒரு முறை கருமுட்டையை வெளியே உருவாக்கி உள் சேர்த்த பிறகு அதை 10 மாதத்திற்கு வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது.இதை இயற்கையின் விந்தை என்பதா முரண்பாடு என்பதா?
    உயிரணுக்களில் குறைபாடு உள்ள ஆண் அல்லது சினை முட்டை உருவாகாத பெண் இப்படி தம்பதியரில் யாருக்கேனும் நிவர்த்திக்க முடியாத குறை இருக்கும் பட்சத்திலேயே மாற்று வழியாக 'சினைமுட்டை தானம்' அல்லது 'உரிரணுக்கள்' தானம் பெறப்பட்டு இந்த சோதனக்குழாய் முறை செய்யப்படுகிறது.

    எல்லா சோதனைக் குழாய் முறைகளுமே 'டோனார்' முறை இல்லை.

    இப்படி 'டோனார் இடமிருந்து பெறுவதும் தம்பதியரின் சம்மதம் அறிந்து,தகுந்த டோனார் கண்டறியப் பட்டு மிகுந்த இரகசியம் காக்கப் பட்டு ,சம்மந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது.
    எனவே இது ஏதோ பாவச் செயல் போலவும் ,ஒழுக்க நெறியிலிருந்து விலகுதல் போலவும் பெண்கள் அஞ்ச வேண்டாம்.கிராமப் புறங்களில் 'நாத்து நடவு''என்பார்கள்.
    ஓரிடத்தில் விளைவிக்கப் பட்ட நாத்தைப் பிடுங்கி பாத்தியில் நடுவது போலத்தான்.
    இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறனோடும் விளங்குகின்றனர் என்பது கண்கூடு.
    தாய்மை அடைய முடியாமல்,சமூகத்தின் கேலிக்கும்,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வேதனைப்படும் மகளிர் விரும்பினால் இம்முறையைத் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்.இதில் எந்த பாவமும் இல்லை.பணம் மட்டுமே இலட்சக் கணக்கில் செலவாகும்.இதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் 30 -40 ஆக இருந்தாலும் நம்பிக்கையொன்றோ வேண்டியது
    இயற்கையின் வஞ்சனையை விஞ்ஞானத்தால் வெல்லுங்கள் தோழியரே!

    [வாடகை தாய்கள் மற்றும் தத்தெடுத்தல்....பற்றி எனது அடுத்த பதிவுகளில் பார்ப்போம்]

    Wednesday, March 07, 2007

    மகளிர் தினம்..ஒரு கண்ணோட்டம்

    நாளை மார்ச் 8 மகளிர் தினம்.
    வருடத்தில் 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் மகளிர்க்கானதா?
    மாட்டுப் பொங்கலுக்கும் மகளிர் தினத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
    வருடம் முழுவதும் வண்டியிழுத்து,ஏர் ஓட்டி வேலை செய்தாலும் ,வருடத்தில் ஒரு நாள் குளிப்பாட்டி மாலையிட்டு கொம்பு சீவி அலங்கரிக்கப்படும் மாட்டுக்கு மாட்டுப் பொங்கல் மட்டும் விசேஷமானது.மகளிர் தினமும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.
    வருடத்தில் ஒரு நாள் 'பிறந்த நாள் ' போல என வாதிடுவோரிடம் கேட்கிறேன் ஆடவர்தினம் என்று ஏதும் உண்டா?
    மகளிர்க் கெதிரான வன்முறைகளும்,பாலியல் பலாத்காரங்களும் தொடரும் வரை உண்மையான பெண்ணூரிமையும்,சுதந்திரமும் கிடைக்கும் வரை மகளிர் தினம் என்பது பெயரளவில் மட்டுமே.அது இன்னுமொரு அட்ச்ய திரிதியைப் போல் வாங்கி மகிழ மட்டுமே.
    'ஓரு பெண் என்று நள்ளிரவில் தனியாகச் சுதந்திரமாக வெளியே சொல்ல முடியுமோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெற்றதாகப் பொருள்' என்று மகாத்மா சொன்னது இன்னும் கனவாகவே உள்ளது.

    ஒரு ஆடவன் வளர்ந்து ஆளாகி தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை தேடும் கட்டத்தில் தன்னை நேசிக்கக் கூடிய தன்னோடு தோள் சேர்ந்து வாழக் கூடிய துணையாகத் தேடாமல் தன்னை விட வசதியான ,நிறைய கொண்டுவரக்கூடிய பெண்ணா என்றுதானே பார்க்கிறான்.
    அப்படியே வந்தாலும் தனக்கு அடங்கி நடக்ககூடிய ,தனக்கு வேண்டிய வசதிகளை தன் பிறந்தவீட்டிலிருந்து மேலும் மேலும் பெற்றுத் தரக் கூடியவளாக இருக்கவே விரும்புகிறான்.

    இந்த நிலை அடிமட்ட வர்க்கத்தில் மட்டுமில்லை.ஒரு பல்கலைகழகத் துணைவேந்தர் முதல் பிரபலமான நடிகர் குடும்பம்வரை வியாபித்துக் காணப்படுகிறது.

    நான் அப்படிப்பட்டவன் இல்லை எனக்கும் பெண் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு அடுத்தவர் தயவை எதிர்பார்க்க மாட்டேன் என்று சொல்லக் கூடிய பலரும் தன்னைச் சார்ந்த பெண் தனக்குக் கட்டுப் பட்டிருக்கவே நினைப்பர்.

    ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் என்பது அவளின் கருத்துச் சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது.'பொட்டச்சிக்கு என்ன தெரியும் வாயை மூடிக் கொண்டு பேசாம் இரு' எனும் ஆடவன் குரல் ஒலிக்கும்வரை பெண்ணுரிமை ஏட்டுச் சுரைக்காய்தான்.

    பெண்ணுரிமை என்று முழங்குவோர் முதலில் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்.ஒரு ஆணுக்கு எத்துணை உரிமையுண்டோ அத்துணையும் பெண்ணுக்கும் கிடைக்கட்டும்.ஒவ்வொரு குடும்பமும் திருந்தினாலே மொத்தமாக சமுதாய மற்றம் ஏற்படும்.

    ''அவள் அழகாயில்லாததால் என் தங்கையானாள்' என்று கவிதை எழுதினால் ரசிக்கும் ஆடவர் போக்கு மாறும்வரை,தன் துணையைத்தவிர சக பெண்டிரை தாயாய்,சகோதரியாய் மகளாய்ப் பார்க்கும் வரை மகளிர்தினம் எந்த சமுதாயப் புரட்சியையும் ஏற்படுத்திவிட முடியாது.
    பெண்ணென்ற அலட்சியப் போக்கும்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனோபாவமும் மாறி, பெண்களுக்கெதிரான சாதீய,மத,சமுதாய்க் கொடுமைகளும் வன்முறைகளும் களையப்படும்வரை மகளிர் தினம் என்பது பத்தோடு பதின்னொன்றான ஒரு கலாச்சார கொண்டாட்டமே அல்லாது உண்மையான பெண்ணுரிமைக்கோ சமத்துவத்திற்கோ அடிகோலும் வித்தாக முடியாது.

    Tuesday, March 06, 2007

    தலைக் கவசம் ..ஒரு தெரியாத சங்கதி

    தமிழக அரச்சின் சமீபத்திய உத்தரவு ஒன்று அநேகருக்கும் தெரிந்திருக்கும்.
    வரும் ஜூன் 1 ந்தேதி முதல் தலைக் கவசம் [ஹெல்மெட்] கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    இரு சக்கர வாகன ஓட்டிகள் அவசியம் லைசென்ஸுடன் இனி கவசத்தையும் சுமக்க வேண்டும்.
    கடந்த வருடத்தில் மட்டும் சாலை விபத்துக்கள் சுமார் 4500 உயிர்களை பலி கொண்டிருப்பதாக அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
    இது குறித்து 'டெக்கான்'என்கிற நுகர்வோர் அமைப்பு நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது.ஆணையை எதிர்த்து அல்ல.மத்திய அரசின் ஒரு ஆணையை அமலாக்கி ,அதன் மூலம் பல நுகர்வோர் பயன் பெறவே கோர்ட்டுக்குப் போயிருக்கின்றனர்.
    இப்பவெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் பொருட்களின் மீதான வரி ஏய்ப்பை நுகர்வோர் அறியும் படி ஒரு சில விளம்பரங்களைக் காணலாம்.'ஜஹாஓ கிருஹக் ஜஹாஓ' என்ற இந்தி
    வார்த்தையின் தமிழாக்கமாக,'விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள் 'என்று வரும்.
    உப்புக்கும் மளிகைப் பொருட்களுக்கும் விழித்திருக்கச் சொல்லும் மத்திய,மாநில அரசுகள் முக்கியமான ஒரு அரசாணை விஷயத்தில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்பது
    'டெக்கான்'அமைப்பு கோர்ட்டுக்குப் போகும் முன்னால் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது தெரியாது. 2005 செப்டம்பர் மாதம்மத்திய மோட்டார் வாகன சட்டம் 138-f ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அதில் ஒரு வாடிக்கையாளர் இரு சக்கரவாகனம் வாங்கும் போது அத்துடன் ஹெல்மெட்டையும் உற்பத்தி செய்த நிறுவனம் தர வேண்டும் என்பதுதான் அது.அதுவும் இந்திய அரசின் தரக் காட்டுப் பாட்டு விதிப்படியான தரத்துடன் இருத்தல் வேண்டும்.
    வாகனத்துடன் சீட்,டயர் போன்றவைத் தரப் படுவது போலவஇலவசமாகவேத் தரப்பட வேண்டும்.உற்பத்திச் செலவுடன் விலையைக் கூட்டக் கூடாது.இது ஏப்ரல் 2006 லிருந்து நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்பது சட்டம்.
    ஆனால் இன்றைய தேதிவரை எந்த நிறுவனமும் அதைக் கடைபிடிக்கவில்லை.நுகர்வோர் அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை.
    இப்போது கட்டாயமாக தலைக் கவசம் வேண்டுமென்பதால் இது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட இருக்கிறது.
    2004 லிலேயே சட்டம் போடப்பட்டதால் அன்றிலிருந்து இன்றுவரை விற்பனையான அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் [சுமார் 19 லட்சம்]ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும்.இனி தயாரித்து வரும் வாகனங்கள் ஹெல்மெட்டுடனே வர வேண்டும் என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
    மேலும் இனி வாகனங்களுடன் அளிக்கப்படக் கூடிய இலவச உதிரி பாகங்களின் விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
    டீலர்களிடம் கேட்டால் இனி நுகர்வோர் வற்புறுத்தினால் நாங்கள் கம்பெனியிடம் சொல்வோம் என்கின்றனர்.
    இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை இது குறித்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.தங்களுக்கு ஆதாயமான விஷயங்களுக்குத் தொண்டர்களை உசுப்பி விடும் சுயநல அரசியல்வாதிகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்குத் தேவையான ஒரு பொருளின் அவசியத்தை உணராமல் மெத்தனமாக இருக்கின்றனர்.
    தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்,'இது கடந்த ஆட்சியின் குறைபாடு.இப்போதுதான் கவனத்திற்கு வந்திருக்கிறது ஆவன செய்வோம் 'என்கிறார்.
    மக்கள் உயிர் பிரச்சனை எனும் போது கூட ஆளுங்கட்சி,எதிர்கட்சி என ஏலம்போடும் சமூக அமைப்பில் இருக்கும் நாம் எப்போது விழிப்பது?
    இது போன்ற நுகர்வோர் அமைப்புகள்தான் நம் உரிமையைப் போராடி பெற்றுத்தர வேண்டும்.

    Monday, March 05, 2007

    ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்

    ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல
    பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
    'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
    இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
    இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
    முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
    திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
    இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
    வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
    கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
    இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
    இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
    சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
    கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
    சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.

    Sunday, February 18, 2007

    பெண்ணுரிமை..ஒரு பார்வை

    சகோதரி லட்சுமியின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தேவையா
    என்ற பதிவும்,பால பாரதியின் 'ஆதலினால்' பதிவும் என்னுடைய இந்தப் பதிவுக்கு காரணமானது.
    முதலில் பா.பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.[நட்சத்திர வாரத்திற்கும்,பெண்ணியம் பற்றிய கருத்துக்கும்].
    சாதி,மத பாகுபாடுபோல் ஆண் பெண் பாகுபாடும் ஒரு விவாதப் பொருளாகிப் போனது வேதனைகுறிய விஷயம்.
    இந்த சமூகத்தில் ஒரு ஆண் செய்வதை பெண் செய்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விடுவர்.பா.பாரதியின் நண்பரைப்போல் 1,2,3 முறை என ஒரு பெண் காதல் வயப்பட்டால் அதைப் பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.கூசாமல் பட்டம் கட்டி விடுவர்.இதையே ஒரு ஆண் செய்யும் போது தப்பாகத் தெரியாது. அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.அந்த ஒரு சிலரை வைத்து பெண்களை எடைபோடுவது சமூக இயல்பாகி விட்டது.
    அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.
    பெண்ணுக்கு பெண் எதிரியாம்.ஆணுக்கு ஆண் எதிரியாவதில்லையா? எந்த ஒரு கோணத்திலிருந்து விவாதித்தாலும்,அது ஆண்பெண் இருவருக்குமானது தானே.
    பெண்ணிடம் சில மேன்மைகளும்,ஆணிடம் சில ஆளுமைகளும் இருக்கலாம்.ஆனால் யாரும் யாரைவிடவும் உயர்த்தி,தாழ்த்தி இல்லை.
    அவதூறுகளுக்கும்,ஆபாசங்களுக்கும் அஞ்சியே எப்போதும் பெண் அமைதி காத்து,கவசம் அணிகிறாள்.
    பெண்ணுரிமை பேசும் எந்த ஆண்மகனும் தன் வீட்டுப் பெண் அடங்கி [அடக்கமாக] இருக்கவே விரும்புவான். அடுத்த வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும் யாரும் தன் வீட்டுப் பெண் விமர்சிக்கப் படுவதை விரும்ப மாட்டார்கள்.
    காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
    திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
    புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
    தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
    உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.
    ஒரு பெண் கணவனுக்கு மனைவியாகவோ,பிள்ளைக்குத் தாயாகவோ ஒரு குடும்பத்தின் அங்கமாகும் போது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும்.அதுதான் உண்மையான பெண்ணுரிமை.

    Monday, January 29, 2007

    சத்தியத்தின் வயது நூறு

    மகாத்மாகாந்திஜி தொடங்கிய சத்யாகிரக போராட்டத்தின் வயது நூறு.இதை இரண்டு நாள் விழாவாக இன்றும் நாளையும் தில்லியில் கொண்டாடுகிறார்கள்.
    இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
    இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ

    ''சம வாய்ப்புக்கான கனவு
    சொத்துக்கள் சமமாக பங்கீடு
    செய்வதற்கான கனவு
    ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
    ஒரு மனிதனின் நிறங்கொண்டு
    அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
    நாட்டின் வளங்கள் அனைத்தும்
    ஒரு சிலரின் உரிமையாகாமல்
    மனுக்குல மேம்பாட்டிற்கான
    கருவியாகும் கனவு
    ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
    முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
    .... ..... ....... ....... ....... ....... ...... என்று
    மக்களை பாகுபடுத்தாத கனவு.....
    மார்ட்டின் லூதர்கிங்

    Sunday, January 14, 2007

    முகம் தெரியாத நண்பர்களுக்கு...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    முகம் தெரியாத உறவுகளாய்
    .நண்பர்களாய்இருக்கும்..
    என்னை எனக்கே என்
    எழுத்துக்களின் மூலம் தெரியச் செய்த
    அன்பான தமிழ்மண அன்பர்களுக்கு...வாசகர்களுக்கு
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    Saturday, January 06, 2007

    பால் அருந்தும் அன்னங்கள்

    தமிழ்மணத்தில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மனதில் தோன்றியது இந்தப் பதிவுக்கான கரு.
    ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
    அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
    இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
    தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
    "இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
    என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
    மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
    சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
    மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
    மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
    பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.

    இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
    இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
    பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
    பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
    ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
    குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
    இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
    இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
    பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
    மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
    [இதற்கு எத்தனை வசவு வருமோ]
    அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]